Thursday, July 21, 2011

துணை


இருட்டு பழகி
சாம்பல் பூத்திருந்த போது 
கரிய திரை கிழித்து
வாசல் வழி 
இருண்ட அறைக்குள்
அடர்ந்த நிறத்தொரு பூனை
தலை நுழைத்து
பின் உடல் நுழைத்தது 
இருளைத் தற்காலிகமாய் வெளியேற்றி

திரை மீண்ட போது 
பச்சை நிறத்து இரு 
ஒளிப்புள்ளிகள் வெளியில்!

Tuesday, July 19, 2011

விடை இல்லாதவை


கேள்விகள் விழுந்து
கேள்விகள் முளைக்கும் வனம் 

கேள்விகள்..கேள்விகள் 
சந்திக்கு முடியாத கேள்விகள்
சந்தித்த பின்னும் விடை காண முடியாக் கேள்விகள்

சீழ் பிடித்த புண் கிழித்து
புழுக்களும் நிணமும் கொட்ட கொட்ட
காட்சியாக்குபவை சில

என்றோ விழுந்து
கன்றிய வீக்கம் தொட்டு
உத்தடம் தருபவை சில

வெளி மொத்தம் 
ஒடுங்கிய புள்ளியில் 
ஊசலாடுபவை சில

ஆக இருண்ட குகையில்
வந்த முதல் வெளிச்சமெனச் சில

பூமி கீறிய 
புல்லெனச் சில

புதைந்து முளையா 
விதையாகச் சில

கரிய இரவில்
மின்மினி என 
அழகு காட்டுபபவை சில

கேள்விகள் இவை
கேள்விகள் மட்டுமே
எப்போதைக்கும்!






Monday, June 27, 2011

ஒன்றே

ஒரு விதை.
ஒரு மண்.

மண் தோன்றிய போதே
விதை இருந்ததா?
மண் தோன்றிய பிறகு
விதை விழுந்ததா?

விதை முளைத்து
விதைகளாய்ப் பிறந்தன
மண் எங்கும்
விதை விதை

மண் வேறு விதை வேறா?
இங்கு விதையே மண்
மண்ணே விதை!