Tuesday, December 22, 2009

கவிதை 3: பக்கத்தில் நீ...

நிலவில்லா இரவு
ஒரேஒரு விண்மீன்
சலசலக்கும் ஓடை
பக்கத்தில் நீ.

தூரத்து விளக்கு
கரைதீண்டும் அலை
ஒற்றைப் படகு
பக்கத்தில் நீ.

அதிகாலை வெளிச்சம்
அணில்பேசும் சத்தம்
நம்வீட்டுக் கொல்லை
பக்கத்தில் நீ.

முற்றத்துக் கோலம்
முல்லைப்பூப் பந்தல்
மேகத்தின் முதற்துளி
பக்கத்தில் நீ.


எதிர்பார்த்த முத்தம்
எதிர்பாராக் கண்ணீர்
அரவணைக்க நான்
தோள்சாய நீ!

Saturday, August 15, 2009

கவிதை 2

என் கவிதைகளில்
எப்போதாவது வரும்
எழுத்துப் பிழைகளும்
எப்போதும் வருகின்ற
நீயும்தான்
அழகானவைகள்..

Saturday, July 18, 2009

கவிதைக் கிறுக்கல்கள்

மிகுந்த கால இடைவேளைக்கு பிறகு இன்றுதான் பதிவிடுன்கின்றேன். இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. விடு மாற்றம் செய்ய வேண்டி இணையம் எங்கள் அறையில் தற்காலிகமாக துண்டிக்க பட்டிருந்தது. மீண்டும் இருவாரங்களுக்கு முன்புதான் இணையம் தொடர்பு கிடைத்தது. மேலும் கடந்த வார இறுதி நாட்களும் நான் என் சொந்த ஊருக்கு சென்றிந்தேன். எனவே பதிவிடத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

இந்த பதிவில் சமீபத்தில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு.
இதுவரைக்கும் கவிதை என்று நான் எழுதியவைகளை, நான் மட்டும் படிப்பதற்காகவே வைத்திருந்தேன். என்னை சுற்றி நிகழ்பவற்றினால் எனக்குள் எழும் மன எழுச்சிகளை பதிவு
செய்யும் வடிவமாய் அவற்றைப் பார்கின்றேன். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னைத் தவிர மற்றவர்களின் பார்வை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் சிறிய ஆசை(பேராசையோ ?)

கவிதை-1

' தாழம் பூவே வாசம் வீசு '
- பாலுவின் குரல்,

நீர்க்குழாயின் தண்ணீர் சீறி
தரை தொடும் ஓசை,

வானம் கொட்டும்
இடி முரசு,

ஒற்றை நொடியில்
தற்செயலாய்
ஒரு இசைக்கலவை

மின்னழுத்த வேறுபாட்டால்
நின்று மீண்டும்
வானொலி தொடங்கிய
இடைவேளையில்......

கோடை மழை
தரை கொட்டும்
அந்தத் தருணம்.