Monday, June 6, 2011

மன்னிப்பு!

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

உன்னால்
தவறுகளை
மறக்கமுடியும்!

ஆறு
ஓடி ஓடி
கடலோடு
சேர்வது
போல்

நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உணர்வுகள் உன் நீர்க்கால்கள்.

நான் உதிர்க்கும்
கசடுகள்
பாரமாய் விழும்
ஒவ்வொருமுறையும்
அதைக் கடத்திவிட்டு
மீண்டும் மீண்டும்
உன் பூரணத்தூய்மையோடு
என்னைச் சந்திக்க
உன்னால் முடிகிறது!

நீ கலங்கமற்று இருக்கிறாய்!

எதையோ கேட்டு
அழுது
உறங்கிய குழந்தை
விடியும் போது
நம்
கழுத்து கட்டி
கிடக்குமே
அது போல்!


ஒற்றை
புன்னகை கீற்றைச் சுமந்து கொண்டு

இந்த பிரபஞ்ச
முழுமையையும்
எல்லா மானுடப் பிழைகளையும்
மன்னிப்பாய்  நீ!

ஆகையினால்,

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

என்னுடையவை ?


தேடி
இடம் பார்த்து
இருதயத்தில்
குரூரமாய்
மிகக்
குரூரமாய்
ஆழக் 
குத்தி விட்டு
பின்
சரி பார்ப்பது!



Sunday, May 8, 2011

பிரியாவிடைகள்

  
பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
மெல்ல
உறிஞ்சப்பட்டு
நாவில் கசந்து ஊர்ந்து
தொண்டைகுழி வழி
எரிய எரிய இறங்கும் 
கடைசி மிடற்று மது
சில பிரியாவிடைகள்.

மஞ்சளாய்க் காய்ந்து
பின்னர் 
செம்மஞ்சளாய் 
மெல்ல மெல்ல
நிறமிழந்து
வெண்மையாய் மாறி
சனம் சனமாய்
இருளுக்குள் விழுந்துபோகும்
பகலின்
பிரியாவிடை.

மின்னலாகக் கீறி
வானம் உடைத்து
இடித்து அலறி
சோவெனக் கொட்டி
பெருகி 
ஓடி
ஓய்ந்து போனவை
சில பிரியாவிடைகள்.

இச்சித்து 
விரும்பி
அருந்தி
ஆசை ஆசையாய்
அருந்தியது 
மற்றவர் அறியாவண்ணம் 
நடித்து
மிச்சம் வாய்த்த
கோப்பையின்
கடைசி வாய் தேநீர்
போல
ருசிக்கமுடியாதவை
சில பிரியாவிடைகள்.

பிரியாவிடைகள்
வெவ்வேறானவை
பிரிவுகள்
ஒன்றே போலும்.

பிரிவு

பற்றி உறிஞ்சும் கோடையில் 
தரை
வெளி நோக்கிச் சிந்தும்
கானல் நீர்.

இல்லாத ஒன்றை
இழந்து இழந்து
இழந்து கொண்டே 
இருத்தல்.

Wednesday, March 30, 2011

கூர்வாள்

கூரிய வாள் ஒன்று உண்டு
என்னிடம் 

அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.

என் இதயத் தசைக்கோளங்களுக்குள் 
சொருகி

ஒரு புறம் குத்தி
மறு புறம் வெளிவந்திருக்கும் 
கூர் முனையில் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
தட் தட் என
உதிரத் துளிகள்

தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொரு
தாளம் போல.