Saturday, July 24, 2010

வாசிப்பின் பயன் என்ன? -2



வாழ்வென்பது ஒரு இலக்கற்ற பயணம் தானே. இலக்குகளாக நாம் நினைப்பவை எல்லாம் நமது கற்பனைகள்.

நான் அதை அடைகிறேன், இதை அடைவதே என் லட்சியம் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் தான். ஏனென்றால் நாம் எவற்றை இலக்கென்று நினைக்கிறோம் அவற்றை அடைந்த பின்னும் கூட வாழ்க்கை எஞ்சும். அடையாவிட்டாலும் வாழ்வு தொடரும்.

வாழ்வு என்பது ஒரு பயணம். இங்கு பயணமே பிரதானம். பயணத்தின் இலக்கல்ல.
ஓடும் நதியைப்போல.

நதி நதியாய் இருப்பது  ஓடும் வரையே. தொடங்கும் இடத்திலும் சென்று முடியும் இடத்திலும் நதி  நதியாய் இருப்பதில்லை. கடலை அடைவதற்காக ஒன்றும் நதி பயணிப்பதில்லை. ஓடுவது நதியின் இயல்பு. ஓடும் வரையே நதி.

வாழ்வென்பது ஒரு தவம். தவத்திற்கும்  இலக்கு என்று ஒன்று இல்லை. அப்படி ஒன்று இருந்து, அதை நாம் அடைந்து விட்டால் அந்த புள்ளியில், இரண்டுமே முடிந்து விடும். தவமே தவத்தின் பயன். வாழ்தலே வாழ்வின் சிறப்பு.

இதைபோன்றதே வாசிப்பும். வசிப்பதால் நிகழ்வதென்ன? பயன் என்ன? என்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை.

வாசித்தலில் நாம் கற்பித்துக்கொள்ளும் இலக்குகள் தீர்ந்த பின்னும் வாசித்தல் எஞ்சும். அறிதல் என்பதற்கு முடிவில்லை. 

ஓடும் நதி இருபக்க கரையையும் வளபடுத்தி செல்லுதல் போல. வாசித்தாலும் கூட வளப்படுத்தும், விசாலப்படுத்தும் நம் மனங்களையும், எண்ணங்களையும்.

வாசகனுக்கு கால, தூர  பரிமானங்களில்லை. மனித மனம் என்பது கற்பனைகளால் எல்லா திசைகளிலும் விரிவடையும் கோளம் போல. அதை உந்தி விரிவடைய செய்யும் நல்ல இலக்கிய வாசிப்பு.

முடிவற்றது. இந்த விரிதல் இல்லை என்றால் சுவாரஸ்யம் இல்லை.

நல்ல இலக்கியம் ஒரு சுய விமர்சனமாக அமையக்கூடும். ஒரு கண்ணாடியைப்  போல  நம்மை நாமே கண்டுகொள்ள உதவும்.நம்மையே புறம் நின்று உள் நோக்க வாய்ப்பளிக்கும். தன்னை தானே நிர்வகித்துக் கொள்ளவும், ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் உதவும். எங்கோ இருக்கும் ஒரு ஆசிரியன் எழுதும் இரு வரிகள் நம்மை பற்றியதாய் அமைந்து போவது வியப்புக்குரியதல்லவா?

முற்றும்.


Friday, July 23, 2010

எதை எழுதுவேன் நான்!

எழுது எழுது
என்கிறாய்
என்ன எழுதுவேன்
நான்.

பிறந்த குழந்தையின்
மூடிய கரங்களுக்குள்
விரியும் பிரபஞ்ச வரிகள்!i

இருதுண்டாய் வானம்
கிழித்து மேகங்கள்
இடும் மின்னல் வரிகள்!

அடிவானம் கடலோடு
முத்தமிட்டு விளையாடும்
தொலைதூர ஒற்றை வரி!

கரையோடு மோதுமலை
எழுதி எழுதி அழிக்கும்
வெண் நுரை வரிகள்!

பாலருந்தும் மழலை
வாயோரம் ஒழுகிவரும்
அமுதப் பால் வரிகள்!

நெடுநாளாய்க் காணாது
கண்ட போது அன்னை
சிந்தும் கண்ணீர் வரிகள்!

இவை எழுத என்னிடம்
மொழிகள் இல்லை
எதை எழுதுவேன்
நான்!

Saturday, July 3, 2010

வாசிப்பின் பயன் என்ன?

இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

http://www.jeyamohan.in/?p=7290

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இந்த தலைப்பில் ஒரு இடுகை கண்டேன். அன்பர் ஒருவரின் கடிதம் அது.

நம்மை போன்ற பலரும் நமக்குள்ளும் மற்றவரோடும் பலமுறை விவாதித்திருக்கும் விஷயம் தான்.

வாசிப்பின் தொடக்க காலங்களில், வாசிப்பு என்னும் பெருஞ்சமுத்திர கரையில் நின்று கொண்டு, என்னை நனைத்து கொண்டிருந்த அலையோடும், நுரையோடும் உறவாடி கொண்டிருந்த போதுகளில், எனக்குள்ளே விவாதித்தவைகளைத் தான் அந்த கடிதத்தில் கண்டேன்.

இன்று அதை தொட்ட என் மீள் சிந்தனை...

இலக்கிய வாசிப்பு எதற்காக இல்லை வாசிப்பு என்பது எதற்காக? எதை நோக்கிய பயணம் இது?

இலக்கென்ன?

இதே கேளிவிகளை தான் வாழ்வோடும் தொடர்பு படுத்த முடிகிறது.

வாழ்வு என்பது எதை நோக்கி? இல்லை எதற்காக?

தொடரும் .....


வாசிப்பு