Monday, June 27, 2011

ஒன்றே

ஒரு விதை.
ஒரு மண்.

மண் தோன்றிய போதே
விதை இருந்ததா?
மண் தோன்றிய பிறகு
விதை விழுந்ததா?

விதை முளைத்து
விதைகளாய்ப் பிறந்தன
மண் எங்கும்
விதை விதை

மண் வேறு விதை வேறா?
இங்கு விதையே மண்
மண்ணே விதை!

Sunday, June 26, 2011

நடை

விழுந்து
எழுந்து
நடைபழகத்தான்
ஆசை எனக்கு!

முன்னின்று எனை நோக்கி
கைகொட்டி வாவென்று அழைக்குமுன் 
ஒவ்வொரு முழுமையான எட்டுக்கும்
இரண்டு மூன்று எட்டுகள் வேண்டும் எனக்கு!

பின் நகராதது போல் பின் நகருவாய்.
ஒரு எட்டுபோல் அரை எட்டுகளும் வைக்கத் தெரியும் உனக்கு
எதை எப்போது செய்கிறாய் என்பது தெரிவதில்லை.
அவை என்னை மேலும்
முன் நகர்த்துவதற்கான
உன் யுத்திகள்!

சிலர்
என் பக்கங்களில் நின்று
விரல் பிடிக்கச் சொல்கிறார்கள்
பிடிக்காது போனால்
நீ என்னை ஈர்த்து கொண்டதாக அங்கலாய்கிறார்கள்

நான் தேர்ந்து கொண்டபின்
உன்னை நோக்கி நடக்கிறேன்

அவர்கள் அறிவதில்லை
நான் நடக்க விரும்புவது
எனக்கான நடையை!

சிலர்
என் பாதைகளை
முடிவு செய்ய முயற்சிக்கிறார்கள்.

இலக்கு என்னவென்று
தெரிந்தால் அல்லவா
பாதையை முடிவு செய்வது!

ஒன்றை நம்புவது
தெரிந்து கொண்டதாகாதே?

Monday, June 6, 2011

மன்னிப்பு!

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

உன்னால்
தவறுகளை
மறக்கமுடியும்!

ஆறு
ஓடி ஓடி
கடலோடு
சேர்வது
போல்

நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உணர்வுகள் உன் நீர்க்கால்கள்.

நான் உதிர்க்கும்
கசடுகள்
பாரமாய் விழும்
ஒவ்வொருமுறையும்
அதைக் கடத்திவிட்டு
மீண்டும் மீண்டும்
உன் பூரணத்தூய்மையோடு
என்னைச் சந்திக்க
உன்னால் முடிகிறது!

நீ கலங்கமற்று இருக்கிறாய்!

எதையோ கேட்டு
அழுது
உறங்கிய குழந்தை
விடியும் போது
நம்
கழுத்து கட்டி
கிடக்குமே
அது போல்!


ஒற்றை
புன்னகை கீற்றைச் சுமந்து கொண்டு

இந்த பிரபஞ்ச
முழுமையையும்
எல்லா மானுடப் பிழைகளையும்
மன்னிப்பாய்  நீ!

ஆகையினால்,

களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!

என்னுடையவை ?


தேடி
இடம் பார்த்து
இருதயத்தில்
குரூரமாய்
மிகக்
குரூரமாய்
ஆழக் 
குத்தி விட்டு
பின்
சரி பார்ப்பது!