Thursday, June 4, 2009

சுழியம்

சுழியம்....
எதுவுமற்றத்தைக் குறிக்கும் குறியீடு..
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பிரபஞ்சத்தின் வடிவமும் கூட..

எண்களில் தனித்த வடிவம் கொண்ட ஒரே எண். உயிர் குலத்தின் அனைத்து உயிர் வித்துகளும் '0' வடிவம் தான்.

என்னை என்றுமே வசிகரித்த எண். அதனாலேயே என் 'ப்லோக்' க்கு இதையே பெயராகத் தேர்ந்தெடுதேன்.

இந்த வலைப் பயணத் தொடக்கத்திற்கும் ஒரு வகையில் இதுவே காரணம். எந்த எண்ணின் முன்னால் சுழியம் வந்தாலும் அதற்குப் பொருள் இல்லை. அதே சமயம் எந்த எண்ணின் பின்பு வரும்போது அந்த எண்ணின் மதிப்பையும் சேர்த்தே பெற்றுக்கொள்ளும் சிறப்பு வாய்ந்தது.

மனிதனின் அனுபவமும் ஏதுமற்ற ஒரு சுழியத்தில் இருந்து தொடங்குவதுதான். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் நம்மை பற்றிய மதிப்பீடு என்பதே அந்த அனுபவம் சார்ந்தே கணக்கிடப் படுகிறது.

தொடக்கத்தில் சுழியம் போல் மதிப்பற்று இருந்த 'அனுபவமே' பின்னர் வாழ்க்கையின் மதிப்பீடாகா அமைந்து போவது விந்தைதான் அல்லவா.

எறும்பிற்கும் அனுபவங்கள் உண்டு. எந்த ஒரு மனிதனை விடவும் அவை மிகச் சிறந்த அனுபவங்களைக் கூட அடைந்திருக்கலாம்.

காலப் பெருவெள்ளத்தின், பிரபஞ்சத்தின் பரிமாணங்களோடு ஒப்பிட்டு பார்கையில் மனிதன் என்பவன் மிகச் சாதரணமானவன். அவன் அனுபவங்களே அவனை முழுமை அடையச் செய்கிறது.

அதைப்போல, சாதரணமானவனகிய நான் என் வாழ்வில் எதிர் கொண்டவற்றையும், இயல்பாக அவை எனக்குள் ஏற்படுத்திய எதிர் வினைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

என்னை போன்ற சக மனிதர்களின் அனுபவங்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இதன் பயன் என்ன என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

எழுந்து நிற்க விரும்பும் மழலை விழுவது என்பது இயல்புதானே. எழுவதற்கு பயிற்சியும் கூட.

நமக்குள் நடக்கத் தெரிந்தவர்கள் இருப்பீர்கள் நான் நடக்கவும் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டேன்...


'அறியாமை அறிந்து
அறிதல் தொடங்கும்
அறிந்தும் அறிந்தும்
அறியாமை எஞ்சும் - முற்றும்
அறிதல் என்பதும்
அறியாமை தானோ
அறியாமை இன்றேல்
அறிதலும் இல்லை!'

2 comments:

  1. நல்வருகை தோழா

    ReplyDelete
  2. நன்றி கிஷோர்.

    உங்கள் பதிவுகளையும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

    ReplyDelete