Wednesday, January 12, 2011

மார்கழிப் புலர் காலைப் பொழுது!

இன்று மதிப்பிற்குரிய சுசீலா அம்மா வின் 'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக.... பதிவினைப் படித்த பொழுது, வெருண்டு கிடக்கும் புழுதிக் காட்டில் விழும் முதல் மழை கிளரிவிடம் மண் வாசனை போல நினைவுகள் எழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை. நன்றி அம்மா தூண்டுதலுக்கு.

ஸ்ரீவில்லிப்புத்தூரை  பிறந்த இடமாய்க் கொண்டதற்கு என்றென்றும் பெருமை கொள்கிறேன் !

ஸ்ரீவில்லிப்புத்தூரை விட்டு வேறிடத்தில் தங்கி இருப்பது நான்கு மார்கழிகள்  ஆகத்தான். அனால் நான்கு யுகங்களைப் போல் உணர்கிறேன்.

உங்களுக்கு எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால்  என்ன சித்திரம் மனம் எழுமோ  தெரிய வில்லை. என் மனமெழும் முதற்ச் சித்திரம், பனி பெய்யும் மார்கழி மாதம் தான்.
'மாதங்களில் நான் மார்கழி - கீதையில் கண்ணன்.  என் மனவிரிவில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அது ஆண்டாள் தான். அவள் பாசுரங்கள் தான்.

சிறுவயதுகளில் பாசுரம் அறியாமல்  திருப்பாவை யும்  அறியாமல், என் *ஆச்சியின் கரம் பிடித்து பனி சிந்தச் சிந்த நடந்து சென்ற மார்கழியின் காலைப் பொழுதுகள் நான் என்றென்றைக்கும் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கும் அபூர்வ பொக்கிஷங்கள். ஒவ்வொரு ஆங்கிலப்  புத்தாண்டும் விடிந்தது சிறு பூவிரிதலைக் கண்ணுற்றது போல மனம் நிறைந்து கிடக்கின்றன மார்கழிப் பனி சிந்த. வாசலில் கோலமிட்ட ஆச்சிக்கு ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்து எழுதக் கற்பித்தது முதல் பக்கத்துக்கு வீட்டு அத்தை Prosperous New year என்பதை  Phospherous New Year என்று எழுதியதை திருத்தியது வரை எல்லாம் அழியா நினைவுத் தடங்களாய்.

தொடக்கப்  பதின் வயதுகளில் அகப்பட்டதை எல்லாம் வாசிக்கத் தொடங்கிய பொழுதுகளில் திருப்பாவை வாசித்தது ஒரு விதமான சந்தச் சுவையை மட்டும் தான் தந்தது என்றாலும், புரிந்து கொள்ள இயலாவிட்டாலும் மழலைச் சொற்கள் நமக்குள் தூண்டிவிடும் மகிழ்ச்சி நரம்புகள் நுணுக்கமானவை.

தமிழ் பகுத்தறிய அறிந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக பாவையின் பொருள் புரியத் தொடங்கிய போது  பரவிய புல் வெளியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக தலை காட்டும் பூக்கள் எந்தனை பிரமிப்பைத் தரக்கூடும் என்று உணர்ந்த சமயங்கள்.

பின்னொருநாள் உறவினர் வீட்டில் அமர்ந்திருந்த பொழுது தற்செயலாகக் கையில் கிடைத்து திருப்பாவைப்  பதிப்பு வாசிக்கையில் மூடிய மேகம் விலக நிலவு பிறந்தது போல் "குத்து விளக்கெரிய .."  பாசுரத்தின் பொருள் விளங்கியது ஒரு மெல்லிய அதிர்ச்சி, ஒரு பதிலும் கூறாமல் உறவினர் வீடு விட்டு வந்து விட்டேன். ஒரு சிறிய திருப்பம் அது. நான் அன்று வரை கண்டு வந்த ஆண்டாள் விலக அதன்  உள்ளிருந்து பிறந்து வந்த ஒரு பெண்ணாக என்னை ஆண்டாள் தமிழாக.

தேடித் தேடித் வாசித்தேன் நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும். மிக நல்ல தொடக்கம் அது. நாள் முழுவதும் சிந்தித்திருக்கிறேன் 'கற்பூரம் நாறுமோ வையும்' 'குத்து விளக்கையும்"

அந்த தொடக்கம்  நிகழாது போயிருந்தால் இந்த அளவேனும் தமிழ் படித்தமை நிகழாது போயிருக்கம். அதன் இழப்பு என்னவென்பது? நான் இன்று காணும், உணரும் வாழ்வின் எதிர்ப் பதமாய்ப்  போயிருக்கும். என் வாழ்வில் நிறைவு இருந்திருக்கலாம் அனால் அழமற்றதாய் ஆகி இருக்கும்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும் விரிக்க ஒரு காட்சி போல் விரிவன. நல்ல ஒரு ஒளிக் கலைஞர் வாசிக்கும் பொழுது அந்த பாசுரம் ஒரு காட்சிப்   புடவையாக விரியதக்கன.

காலை என்ற நிலை தெரியும். சிறு காலைப் பொழுதும் புரிகிறது. சிற்றம் சிறு காலை என்பது காலை என்று போதினுள் நுழையும் நுண் தருணத்தை குறித்திருப்பாளோ? என்று வியந்திருக்கிறேன். இன்று சுசீலா அம்மாவின்  பதிவு படித்த போது நான் உறுதிப்படுத்திக்கொண்டது அதை தான்.

மார்கழியின் நாள்களில் முன் பகற்போதுகளிலும் நிலவு தெரியும். "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்"  வரியின் பொருள் யாரோ விரித்துச் சொன்னபோது. இது அறிவியல், புரிந்து கொண்டேன். பின் இரவில் உதித்து முன்பகல் வரை காணும் நிலவு மார்கழி நிலவு.

ஆழிமழைக் கண்ணா மீண்டும்  மிக எளிய அறிவியல்.

'குத்து விளக்கு எரிய கோட்டுக்கால் காட்டின் மேல் ' ஒரு இயல் மனதின் விரகத்தில் பிறந்து மென் இயல்பு. கோபம்.

நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் அளவு கடந்த அன்பிற் பிறந்தச்  சலிப்பு.

இவ்வரியை பொருள் கொள்ளும் போதும் சற்றே கூட்டி "வாய் திறவாய்" என்று கேட்கிறாளே? ஒருவேளை மலர் மார்பன் நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்தது அவன் வாயைத்தனோ? (தவறாக பட்டதென்றால் தவிர்த்துவிடவும்)

எல்லே எனத்தொடங்கும் பாசுரம்; வட்டார வழக்குகளை பதிவு செய்த முதல் ஆசிரியை.
இன்றும் தென் தமிழகத்தில் சமவயதுடையவர்களையும் இளையவர்களையும் விழிக்க உபயோகிக்கும் சொல் 'ஏலே'

'பையத் துயின்ற பரமனடி பாடி' அறிதுயிலைப் *பையத் துயின்றான் என்கிறாள் கோதை. 'பையப் போ', 'பையச்  சாப்பிட'  யாரேனும் நடக்கையில் தடுமாறினால் என் தெருவின் முதியவர் இயல்பாகச் சொல்லும் வாக்கியம்  'பைய பார்த்து போ வெள்ள" பைய என்ற சொல்லு மெல்ல அல்லது மெதுவாக என்று பொருள் படும்.

பின் குறிப்பு :
         *ஆச்சி - தென் தமிழகத்தின் சில பகுதிகளில்(திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் ) சில சமூகங்களுக்குள் பாட்டியை விளிக்க உபயோகப்படுத்தும் சொல்லு. செட்டிநாடு வழக்கில் உள்ள ஆச்சி அல்ல.
       *பைய - மெல்ல அல்லது மெதுவாக என்ற பொருளில் உபோயோகப்படுத்தபடும் சொல்.

1 comment:

  1. ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்த பெருமையை இப்போது புரிந்தது.இன்னும் எத்தனை பேர் இதுபோல் உள்ளனரோ;இதை படித்ததற்கு பின்பு தெய்வீக பிரப்பம் ஸ்ரீ ஆண்டாளில் பிறந்த மண் என்பதை நினைத்தாள் மிகவும் பெருமையாக உள்ளது.இதற்க்கு அப்புரும்தான்.ஸ்ரீவில்லிபுத்துரின் வீதிகலில் நடக்கும் போது இந்தமனின் அந்த பொற்பதங்கள்
    இந்த இடத்தில் இருக்குமா; அல்லது அந்த இடமாக இருக்குமா; என்மனம் அலைபாயும் போது, அந்த பாதங்கள் பட்ட இடம் எது என்று தெரியாமல், இந்த ஊர் முழுவதுஉருண்டு விடலாம் போல்உள்ளது.[அதாவது அங்கபிரதட்சனை ]இவர் மென் மேலும்சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete